கிளிநொச்சி பாலியல் குற்றச்சாட்டு, 4 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 15, 2010



இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் விசுவமடம் பகுதியில் கடந்த ஜூன் 6 ஆம் நாள் குடும்பப் பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பி.சிவகுமார் முன்னிலையில் இடம் பெற்றது.


இந்த அடையாள அணிவகுப்பில் 38 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டினர். அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.


அடையாளம் காணப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.


இந்த அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கொழும்பில் இருந்து சென்றிருந்த சட்டத்தரணிகள் எஸ்.ரட்ணவேல், அ.விநாயகமூர்த்தி, கே.கேசவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.


கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.


மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் பிபிசி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கையில், "சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும்," எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]