அமெரிக்காவில் களைக்கொல்லி-எதிர்ப்பு மீத்திறன் களைகள் பயிர்களைத் தாக்குகின்றன

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 9, 2011

களைக்கொல்லி எதிர்க்கும் மீத்திறன் கொண்ட களைகளின் அதிகரிப்பினால் வேளாண்மை உற்பத்திச் செலவு, உணவுக்கான செலவு, மற்றும் வேளாண்மை மாசுபாடு போன்றவை அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


தெற்கு கரோலைனாவில் சோயா பயிர்ச்செய்கை

ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவின் தென்மேற்கு ஒண்டாரியோ பகுதிகளிலும் இத்தகைய மீத்திறன் கொண்ட களைகள் பயிர்களைக் கடுமையாக தாக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுவரைக்கும் உழவர்கள் கிளைபோசேட் (glyphosate) அல்லது ரவுண்டப் (Roundup) என்ற களைக்கொல்லியைப் பரவலாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அத்தகைய களைக்கொல்லியை இந்தப் புதிய வகை மீத்திறன் களைகள் எதிர்க்கும் சக்தியைப் பெற்றுள்ளன. இதனால் மில்லியன்கள் கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


இத்தகைய மீத்திறன் கொண்ட களைகளை ஒழிப்பதற்கு உழவர்கள் வேறு சிக்கல் மிகுந்த வேதியியல் கலவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. உழவர்கள் இந்தக் களைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய செலவுகளையும் எதிர்நோக்குகிறார்கள். உழவர்கள் நீண்ட நாட்கள் பயிரிட்டு வந்த இந்தக் களை எதிர்ப்பு தாவரங்களும் இனிப் பயிரிடப்பட முடியாதுள்ளது.


கிளைபொசேட்டு எதிர்ப்புத் திறன் கொண்ட களைகள் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் தோன்றின. தென்மேற்கு இந்தியானாவில் சோயா பயிரிடும் நிலங்களில் 80 விழுக்காடு நிலத்தை இத்தகைய களைகள் பாதித்தன.


இந்தக் களை எதிர்ப்புத் தாவரங்களை விற்பனை செய்யும் மொன்சான்டோ (Monsanto) உயிரித்தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இதற்கான தீர்வு காண பொறுப்பு உள்ளதா என விமர்சகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.


மூலம்[தொகு]