ஏமனின் பாதுகாப்புத் தலைமையகம் மீது போராளிகள் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 20, 2010

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனின் ஏடன் நகரில் உள்ள இராணுவத் தலைமையகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், அதன் பின்னர் பெரும் புகை மண்டலமும் கிளம்பியதாக தெரிவிக்கப்படுகிறது.


தலைமைஅயகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பல போராளிகளை விடுவித்துக் கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியுள்ளனர்.


ஏமனின் கிழக்குப் பகுதியில் அண்மையில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் ஒன்றுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளத்ன அதிகாரிகள் அல்கைடா தீவிரவாத அமைப்பின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.


தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவச் சீருடையில் வந்தே தாக்குதலை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 0740 மணிக்கு இடம்பெற்றுள்ளது.


காலை நேர கொடியேற்றும் வைபவம் நடந்து கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதனாலேயே பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


தாக்குதலுக்குப் பின்னர் ஆயுததாரிகள் காவலில் இருந்த தமது சகாக்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்றில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


2003 ஆம் ஆண்டில், இதே கட்டடத்தில் இருந்து 10 பேர் தப்பியிருந்தனர்.


ஏமன் அரசு அல்கைடா, தெற்கு பிரிவினைவாதிகள், மற்றும் வடக்குப் பகுதிப் போராளிகள் என மூன்று முனைகளில் இருந்து எதிர்ப்பைச் சமாளிக்கிறது. வடக்குப் பகுதிப் போராளிகளுடன் அரசு அண்மையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.


அராபியக் குடாநாட்டின் அலி-கைடா அமைப்பு 2009 ஆம் ஆண்டில் இரண்டு தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்ததில் அமைக்கப்பட்டிருந்தது.

மூலம்[தொகு]