ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலநடுக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 16, 2011

ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.


குயின்ஸ்லாந்து மாநிலத்தில் போவென் உள்ளூராட்சி

டவுன்ஸ்வில் நகருக்கு தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போவென் நகரில் 10 கிமீ ஆழத்தில் இன்று உள்ளூர் நேரம் மாலை 1530 மணிக்கு 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


மெக்கே உட்பட இப்பகுதியின் பல நகரங்களில் இதன் தாக்கம் உணரப்பட்டது. எனினும், எவ்வித உயிரிழப்புகளோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்றைய நிலநடுக்கம் ஒரு அரிதானதொன்றென ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியா நிறுவனத்தைச் சேர்ந்த நிலநடுக்கவியலாளர் டேவிட் ஜெப்சன் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் இது மிகப் பெரியதென அவர் வர்ணித்தார்.


1900களின் ஆரம்பத்தில் சில நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. கடைசியாக 1935 ஆம் ஆண்டில் பிரேசர் தீவின் மேற்கே 5.5. அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குயின்ஸ்லாந்தில் இவ்வாறான பெரும் நிலநடுக்கங்கள் மிக அரிதாகவே நிகழுகின்றன என அவர் தெரிவித்தார். கரையோரப் பகுதிகளில் ஆழிப்பேரலை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.


குயின்ஸ்லாந்தில் நிலநடுக்கம் இடம்பெற்ற 18 நிமிடங்களுக்குப் பின்னர் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் 5.3 அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த பெப்ரவரியில் கிரைஸ்ட்சேர்ச் நகரில் 6.3 நிலநடுக்கத்தில் 181 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]