வவுனியா சிறைச்சாலைத் தாக்குதலில் படுகாயமடைந்த டில்ருக்சன் மரியதாஸ் உயிரிழந்தார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 8, 2012

இலங்கையின் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தெற்கே மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் டில்ருக்சன் மரியதாஸ் என்ற மற்றொரு அரசியல் கைதி ராகமை மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண அறிவித்துள்ளார்.


கடந்த மாத ஆரம்பத்தில் வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இவர்களில் 30 பேர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். மகர சிறைச்சாலையில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஐந்து பேர் ராகமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஐவரில் நிமலரூபன் என்பவர் சூலை 4 ஆம் நாள் உயிரிழந்தார். படுகாயமடைந்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட டில்ருக்சன் இன்று அதிகாலை 1:30 மணிக்கு உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.


'இக்கொலைக்கு நாம் அரசாங்கத்தை பொறுப்பாளியாக்குகிறோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]