ஆப்கானித்தானில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 2,000 ஐ எட்டியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 1, 2012

ஆப்கானித்தானின் கிழக்குப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அந்நாட்டில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் மொத்த எண்ணிக்கையை 2,000 ஆக்கியது.


வார்தாக் மாகாணத்தில் சனிக்கி8ழமை அன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு அமெரிக்க வீரர், மூன்று ஆப்கானியப் படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


துப்பாக்கிச் சூடு ஆப்கானியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினரா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளதாக நேட்டோ அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


2001 ஆம் ஆண்டு ஆப்கானியப் போர் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்க வீரகளின் இறப்பு எண்ணிக்கை 2000 ஐத் தாண்டியுள்ளது. 17.644 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட அமெரிக்கரல்லாத கூட்டணிப் படையினர் 1,066 ஆகும். கிட்டத்தட்ட 10,000 ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர்.


இதற்கிடையில், ஆப்கானித்தானின் கிழக்கே கோஸ்ட் நகரில் இன்று இடம்பெற்ற ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 நேட்டோ படையினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இறந்த நேட்டோ படையினர் எந்த நாட்டவர் என்பதௌ அறிவிக்கப்படவில்லை எனினும், இப்பகுதியில் அமெரிக்கப் படையினரே நிலை கொண்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நேட்டோ தனது போரிடும் படையினரை 2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் விலக்கிக்கொள்ளப்போவதாக முன்னர் அறிவித்திருந்தது.


மூலம்[தொகு]