நூலக வித்தகர் வே. தில்லைநாயகம் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 11, 2013

தமிழ்நாடு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநர் வே. தில்லைநாயகம் இன்று மாலை 3 மணியளவில் கம்பத்தில் தனது இல்லத்தில் தமது 87வது அகவையில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கின்றன.


தமிழ்நாடு பொதுநூலகத் தந்தை என அழைக்கப்பட்ட வே. தில்லைநாயகம் 15.7.1925ஆம் நாள் பிறந்த இவர் மாணவப்பருவத்திலேயே நூலக இயக்கத்தோடு தொடர்பு பெற்றவர். 1949ஆம் ஆண்டில் பொதுகல்வி இயக்கநராக நூலக சேவையில் சேர்ந்தார். 1962 முதல் 72 வரை சென்னை கன்னிமரா நூலகத்தின் தலைமை நூலகராகப் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டில் நூலகத்துறை உருவாக்கப்பட்ட பொழுது அத்துறையின் முதல் இயக்குநராகப் பதவியேற்றார். 1982ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். பின்னர் ஓய்வூதியர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் 20க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன், க. திரவியம், நெ. து. சுந்தரவடிவேலு போன்றவர்களோடு நெருங்கிப் பழகியவர். நேர்மையான அதிகாரியாக இருந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்.


அவருக்கு கோமதி என்னும் மனைவியும் அன்பரசி என்னும் மகளும் அருள்வேலன் என்னும் மகனும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு நாளை (12.3.2013) கம்பத்தில் நடைபெறுகிறது.


மூலம்[தொகு]