மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 14, 2013

மாலி நாட்டின் வடகிழக்கே கிடால் நகரில் இன்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பு ஒன்றில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் இருவர் கொல்லப்பட்டனர்.


அமைதிப்படையினர் காவலுக்கு இருந்த ஒரு வங்கியே தாக்குதலுக்குள்ளானது. ஐநா வாகனம் ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இத்தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். வங்கிக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.


வடக்கு மாலியில் இசுலாமியப் போராளிகளை பிரெஞ்சு அமைதிப் படையினர் ஓராண்டுக்கு முன்னர் தோற்கடித்தனர். ஆனாலும், தீவிரவாதிகள் தாக்குதல்கள் அங்கு நிற்கவில்லை.


கிடால் நகரம் துவாரெக் இனப் போராளிகளின் பலம் வாய்ந்த கோட்டையாகும். இரு வாரங்களுக்கு முன்னர் இவர்கள் மாலி இராணுவத்தினருடனான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தனர்.


மூலம்[தொகு]