நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 18, 2015

2014ஆம் ஆண்டு கும்பு பனியாற்றின் பகுதியான கும்பு பனியருவிப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மலையேறுபவர்களின் வழிகாட்டிகளாக செயல்பட்ட 16 செர்பாக்கள் கொல்லப்பட்டனர். இவ்விபத்து 2014 ஏப்பிரல் 18 அன்று நடந்தது.


அடிவார முகாமிலிருந்து முதலாம் முகாமுக்கு மலையேறுபவர்கள் செல்ல ஆபத்தான கும்பு பனியருவிப்பகுதியில் கயிறு, ஏணி போன்றவற்றை அமைக்க செர்பாக்கள் முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டது.


அதனால் விபத்து ஏற்பட்ட கும்பு பனியருவியின் இடது புறத்தை தவிர்த்து முதலாம் முகாமுக்கு செல்ல மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும். 2015 மலையேற்ற காலத்திலிருந்து இப்பாதையையே பயன்படுத்த வேண்டும் என நேபாள அரசு அறிவித்துள்ளது.


இப்பாதை கடினமானதும் ஏறுவதற்கு நேரம் பிடிப்பதும் ஆகும். ஆனால் இதில் பனிச்சரிவு ஆபத்து குறைவு. இப்பாதை புதியதல்ல இருபது ஆண்டுகளுக்கு 1950-1990 வரை இப்பாதை பயன்படுத்தப்பட்டது. 1990இல் கும்பு பனியருவியின் இடது புற பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது.பனிச்சரிவு ஆபத்து அதிமுள்ளபோதும் குறைந்த தூரம், ஏறுவதற்கு எளியது என்பதால் அப்பாதையை தேர்ந்தெடுத்தனர்.


விபத்தின் காரணமாக, செர்பாக்கள் பல கோரிக்கைகளை நேபாள அரசு முன் வைத்தார்கள். அதில் அடிவார முகாமிலிருந்து முதலாம் முகாமிற்கு உலங்கூர்தி மூலம் எடை கூடிய பொருட்களை கொண்டு செல்வது, இக்கோரிக்கைக்கு மலையேறுபவர்களுக்கான வெளிநாட்டு முகவர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நேபாள மலையேற்ற முகவர்கள் இதை ஏற்கவில்லை. நேபாள சட்டம் மீட்பு பணிக்கு கூட உலங்கூர்தியை அடிவார முகாமுக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. மலையின் சூழல் மற்றும் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுத்துள்ளது.


அரசு உலங்கூர்திப் பயன்பாட்டில் மாற்றம் கொண்டு வர மறுத்ததுடன் பாதுகாப்பான புதிய பாதையானது செர்பாக்களின் கோபத்தை தணிக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளது. பாதை மாற்றத்தை நேபாள, வெளிநாட்டு நடத்துநர்கள் வரவேற்றுள்ளனர்.


மூலம்[தொகு]