சனிக் கிரக வளையங்களின் அதிர்வலைகள் வால்வெள்ளிகளினால் ஏற்பட்டிருக்கலாம் - வானியலாளர்கள்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 2, 2011

சனி, மற்றும் வியாழன் கோள்களைச் சுற்றியுள்ள வளையங்களில் அவதானிக்கப்பட்டுள்ள அதிர்வலைகள் வால்வெள்ளிகளினால் ஏற்பட்டிருக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


2007 இல் காசினி விண்கலம் எடுத்த சனிக் கோளின் வளையங்களின் புகைப்படம்

வியாழனின் வளையங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய திர்வலைகள் சூமாக்கர்-லெவி 9 வால்வெள்ளி இக்கோளை 1994 ஆம் ஆண்டில் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது குறித்த இரு ஆய்வறிக்கைகள் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


1996, 2000 ஆம் ஆண்டுகளில் கலிலியோ விண்கலம் எடுத்த புகைப்படங்கள், மற்றும் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் 2007 ஆம் ஆண்டில் எடுத்த படங்களை ஆய்வு செய்த வானியலாளர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர். 2009 இல் கசினி விண்கலம் சனிக் கோளின் வளையங்களை எடுத்த புகைப்படங்களும் ஆய்வு செய்யப்பட்டது.


வளைந்த கூரைத் தகடு போன்ற வடிவமைப்பில் அலையியக்கம் போன்ற ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இது பின்னர் குறைந்த கோணத்தில் ஒளியூட்டப்பட்ட போது கரிய மற்றும் வெளிச்சமான பட்டைகளை அவதானித்தனர்.


இவ்வலையியக்கம் சனிக் கோளின் சி வளையம் முழுவதும் ஆயிடக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பரந்து காணப்பட்டது. டீ வளையத்திலும் இது போன்ற வடிவம் அவதானிக்கப்பட்டது. இதேவேளையில், வியாழக் கிரகத்தில் இரண்டு வெவ்வேறு சுருளிகள் காணப்பட்டுள்ளன.


இத்தோற்றப்பாடு வால் நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய சிதைவுகளினால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வால் நட்சத்திரம் வளையத்தில் மோதி அதனைச் சாய்வடையச் செய்துள்ளது.


மூலம்[தொகு]