நேபாளத்தில் அன்னபூர்ணா மலைக்கருகே ஆறு திடீரெனப் பெருக்கெடுத்ததில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 6, 2012

நேபாளத்தின் மேற்கே சேத்தி என்ற மலையாறு நேற்றுத் திடீரெனப் பெருக்கெடுத்து அதன் அணைக்கட்டுகளை உடைத்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், மேலும் பலரைக் காணவில்லை அறிவிக்கப்படுகிறது. அன்னபூர்ணா மலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காணாமல் போனவர்களில் உருசியாவைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.


பொக்காரா நகரில் சேத்தி ஆற்றுப் பள்ளத்தாக்கு

நேப்பாளத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொக்காராவினுள் வெள்ளநீர் புகுந்தது. சேத்தி ஆற்று நீர் கரப்பானி கிராமத்தினுள் வேகமாகப் புகுந்ததில் இரண்டு கட்டடங்கள், மற்றும் பல சேரி வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்தவ பலர் அவர்களது கால்நடைகளுடன் சேர்த்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன பலரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


"இப்பகுதியில் வெந்நீர் ஊற்று ஒன்று இருப்பதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அண்மைக்காலத்தில் இங்கு மழை பெய்யவில்லை, இதனால் ஏன் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது புரியவில்லை," என அரசு அதிகாரி தெரிவித்தார்.


மூலம்[தொகு]