ஆப்கானித்தானில் 10 மருத்துவப் பணியாளர்கள் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 8, 2010

ஆப்கானித்தானின் வட-கிழக்கு மாகாணமான படக்சானில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வாகனம் ஒன்றில் 10 மருத்துவப் பணியாளர்களின் உடல்கள் கண்டிபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.


வெளிநாட்டவர்களில் ஆறு பேர் அமெரிக்கர்கள், ஒரு பிரித்தானியப் பெண், மற்றும் ஒருவர் செருமனியைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்படுகிறது. ஏனைய இருவரும் ஆப்கானியர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அங்குள்ள கிராமங்களில் கண் சிகிச்சை மேற்கொள்ளும் பன்னாட்டு மருத்துவ தன்னார்வலர் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


இவர்கள் பயணம் செய்த வாகனம் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அடுத்த நாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்காரர்களே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்திருந்தாலும், தாமே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பாரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் நூல்கள் பல அவர்களிடம் காணப்பட்டதாக தலிபான் பேச்சாலர் சபிகுல்லா முஜாகிட் தெரிவித்தார்.


"நேற்று 0800 (0330 GMT) மணியலவில் வெளிநாட்டவர்கள் சிலரை எமது ரோந்துப் படையினர் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிருத்தவ மதப் பரப்புனர்கள். அவர்கள் அனைவரையும் நாம் கொன்று போட்டுள்ளோம்,” என அவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார். “அவர்கள் அமெரிக்கர்களுக்கு உளவு பார்ப்பவகள்,” என அவர் மேலும் தெரிவித்தார்.


கிருத்தவப் பணியாளர்கள் என்ற தலிபான்களின் குற்றச்சாட்டுக்களை ஐஏஎம் என்ற குறித்த மருத்துவ அமைப்பின் தலைவர் மறுத்துள்ளார். "அது பொய். அது உண்மையல்ல. ஐஏஎம் என்பது கிருத்த அமைப்புத் தான்,எப்போது நாம் அவ்வாறே இருந்து வந்துள்ளோம்," என்றார்.

மூலம்[தொகு]