ஆப்கானியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிரித்தானிய நிவாரணப் பணியாளர் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 9, 2010

சென்ற மாதம் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த லிண்டா நோர்குரோவ் என்ற பெண் நிவாரணப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


36 வயதுள்ள லிண்டா, டாய் (DAI) என்ற அமெரிக்க நிவாரண நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். இஅவரும் இவருடன் பணியாற்றிய வேறு மூன்று உள்ளூர் வாசிகளுடன் குனார் என்ற கிழக்கு மாகாணத்தில் வைத்து செப்டம்பர் 26 ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்டார்.


நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்கப் படையினர் இவரை மீட்க எடுத்த நடவடிக்கை ஒன்றின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார்.


"மீட்பு நடவடிக்கை ஒன்றின் போது அவரைப் பிடித்து வைத்திருந்தவர்களால் கொல்லப்பட்டுள்ளார்," என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஏக் தெரிவித்தார்.


"நேசப்படையினருடன் நாம் பணியாற்றிக் கொண்டிருந்த போது லிண்டா குறித்த தகவலைப் பெற்றோம். அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. அவர் அங்கு அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரைக் காப்பாற்றுவதற்கு எமக்குக் கிடைத்த தகவல் போதுமானதாக இருந்தது,” என அவர் தெரிவித்தார். ”இப்படியான துயரமான முடிவுக்கு அவரைக் கடத்தியவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்”.


மூலம்