ஆப்கானிய அதிபரின் சகோதரர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 12, 2011

ஆப்கானித்தானின் அரசுத்தலைவர் அமீது கர்சாயின் உடன்பிறவாச் சகோதரர் ஒருவர் இன்று கண்டகார் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சுட்டுக் கொல்லப்பட்ட அகமது வாலி கர்சாய்

ஆப்கானித்தானின் தெற்குப் பகுதியில் பிரபலம் வாய்ந்த அரசியல் புள்ளியாக இருந்த அகமது வாலி கர்சாய் (வயது 50) அவரது வீட்டில் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலை நேட்டொ படைகளுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


மெய்ப்பாதுகாவலர் சர்தார் முகமது என்பவர் கர்சாயை நோக்கி இரண்டு தடவைகள் சுட்டு விட்டு தன்னைத் தானே சுட்டு இறந்துள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இத்தாக்குதலைத் தாமே நிகழ்த்தியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தமது பத்தாண்டுப் போரில் இது ஒரு முக்கிய தாக்குதலாக இதன அவர்கள் வர்ணித்துள்ளனர்.


படுகொலை செய்யப்பட்ட அகமது கர்சாய் ஒரு போர்ப்பிரபு என்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இக்கருத்தினை அரசுத்தலைவர் அமீது கர்சாய் மறுத்திருக்கிறார்.


கண்டகார் மாகாணசபையின் தலைவராக உள்ள அகமது கர்சாய் ஆப்கானித்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க,, மற்றும் நேசப் படைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியவர். இதனால் அவர் தனது போதைப் பொருள் வர்த்தகத்தை தடங்கலின்றி நடத்த முடிந்தது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்[தொகு]