ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 4, 2010

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் சனிக்கிழமை இரவு இந்திய மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமைக்கு ஆஸ்திரேலியம் இந்திய அரசுகள் தமது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.


பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது இளைஞர் நிதின் கார்க் மெல்பேர்ணில் வசித்து வந்தார். ஆஸ்திரேலிய நிரந்தரக் குடியுரிமை பெற்ற இவர், மெல்போர்னில், மேற்கு பூட்ஸ்கிரே என்ற இடத்தில் உள்ள "த ஹங்க்றி ஜாக்ஸ்" உணவகத்தில் அவர் பகுதி நேர வேலையும் செய்து வந்தார்.


இரவு 10 மணிக்கு நிதின் கார்க் வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டார். மெல்போர்ன் நகரில் ஆண்டர்சன் தெரு வழியாக அவர் சென்றபோது, ஆஸ்திரேலியர்கள் சிலர் கும்பலாக வந்து, நிதின் கார்க்கை சரமாரியாக தாக்கினார்கள். அவரது விலா பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தினார். நிதின் கார்க் வேலை செய்யும் உணவகம் அருகில்தான் இந்த சம்பவம் நடந்தது. உணவகத்தில் இருந்தவர்களை நோக்கி, என்னை காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பியபடி, தாக்கியவர்களிடம் இருந்து நிதின் தப்பி ஓடத் தொடங்கினார். மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று தாக்கினார்கள். உணவகத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள பூங்காவில் நிதின் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ராயல் மெல்பேர்ண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்த கொலை காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பதற்றம் காணப்படுகிறது.


மாணவர் நிதின் கார்க் படுகொலைக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்தார். "மாணவர் நிதின் கார்க் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமான செயல். இதை கண்டித்து ஆஸ்திரேலியா அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட், “இந்திய இளைஞர் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். மெல்பேர்ண் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்களும் இதற்கு கண்டனம் தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன்”


2009 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 70,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றனர். இந்திய மாணவர்கள் மீதான அண்மைக்காலத் தாக்குதல்களை அடுத்து, இந்த எண்ணிக்கை 2010 இல் 20% இனால் குறையலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மூலம்