ஆஸ்திரேலியாவில் 2011 பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கை வாய்ப்பை இழந்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 30, 2009


2011 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந்த மாநாட்டை தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் நடத்துவதென திரினிடாட் டொபாகோவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதேநேரம், பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 45 நாடுகள் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த ஆதரவு வழங்கின.


கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இலங்கைக்கு இந்த ஆதரவு கிடைத்தது. எனினும், முக்கிய சில நாடுகளின் கடும் எதிர்ப்பையடுத்து இந்த விடயம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், 2013 இல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"இம்முடிவு வரவேற்கத்தக்கது" என மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் குறிப்பிட்டார்.


ஆஸ்திரேலியா முன்னர் 1981 இலும் (மெல்பேர்ண்), 2002 இலும் உச்சி மாநாடுகளை நடத்தியிருந்தது.

மூலம்[தொகு]