இசுக்காட்லாந்து விடுதலைக்கு எதிராக வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 20, 2014

இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரியலாமா வேண்டாமா என்று 2014, செப்டம்பர் 18 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இசுக்காட்லாந்தின் 32 மன்றங்களுக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரியவேண்டாம் என்று 2,001,926 வாக்குகளும் பிரியலாம் என்று 1, 617,989 வாக்குகளும் பதிவாகின. 4,283,392 வாக்காளர்களில் 84.59% மக்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தார்கள். 84.59% பதிவான வாக்குகளில் பிரியவேண்டாம் என்று 55.30% மக்களும், பிரியலாம் என்று 44.70% மக்களும் வாக்களித்ததால் இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலேயே தொடர்ந்து நீடிக்கும்.


இசுக்காட்லாந்தின் பெரிய மன்றமான (486,219) கிளாக்சோவில் பிரியவேண்டும் என்று 53.49% மக்கள் வாக்களித்தார்கள், இரண்டாவது பெரிய மன்றமான (378,012) எடின்பர்க்கில் 61.10% மக்கள் பிரியக்கூடாது என்று வாக்களித்தார்கள். இசுக்காட்லாந்தின் 32 மன்றங்களில் 4 மன்றங்களே பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.


வாக்கெடுப்பில் தோற்றதால் இசுக்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்சு சால்மண்ட் பதவி விலகினார். எல்லோரும் ஐக்கியமாக இருக்கவேண்டும் கேட்டதுடன் நாட்டின் ஐக்கியத்திற்காக வாக்கு சேகரித்த கட்சிகள் இசுக்காட்லாந்திற்கு பல உரிமைகளை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


பிரதமர் தேவிது காம்ரன் ஐக்கிய இராச்சியத்தில் பிளவு ஏற்படாதது கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார் மேலும் விரைவாக இசுக்காட்லாந்துக்கு அதிக உரிமைக்ளை வழங்கபோவதாக கூறினார்.


கிளாக்சோ பொது நலவாய போட்டிகளை நடத்திய கெல்வினின் இசுமித் பிரபு நவம்பருக்குள் தர உறுதியளிக்கப்பட்ட வரி, செலவினம், நலத்திட்டங்களை மேற்பார்வையிடுவார் என்றும் கூறினார். இது தொடர்பாக சனவரி மாதம் சட்ட முன்வரைவு கொண்டுவரப்படும் என்று கூறியதுடன் இங்கிலாந்து, வேல்சு, வடக்கு அயர்லாந்து ஆகியவற்றின் மக்களுக்கு அவர்கள் தொடர்பான நிகழ்வுகளில் அதிக பங்களிப்பு இருக்கும் என்றார்.


மேற்கு லோத்தியன் தீர்வுக்கு சரியான முடிவு எடுக்கப்படும் என்றார். இப்போதைய தீர்வின் படி இசுக்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெசுட்மினிசுட்டரில் இங்காலந்து தொடர்பான விடயங்களில் வாக்கு செலுத்தமுடியும்..


தோராயமாக 46% மக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்ல வாக்களித்திருப்பதால் பிரதமர் காம்ரன் இசுக்காட்லாந்து இத்தலைமுறையில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லாது எனவும் ஆனால் இது எப்போதும் நிரந்தரம் அல்ல எனவும் கூறினார்.


மூலம்[தொகு]