இத்தாலியின் ரோம் நகரத்தில் தூதரகங்களில் குண்டுவெடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 24, 2010

சுவிட்சர்லாந்து, மற்றும் சிலி நாட்டுத் தூதரகங்களில் பொதிக் குண்டுகள் வெடித்ததை அடுத்து ரோம் நகரில் உள்ள அனைத்துத் தூதரகங்களிலும் இத்தாலியக் காவல்துறையினர் தேடுதலில் இறங்கியுள்ளனர்.


நேற்று முற்பகல் 1100 மணியளவில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்புகளில் இருவர் காயமடைந்துள்ளனர். இருவரும் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர்.


இத்தாலிய அராஜகக் குழு ஒன்று இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாகத் தெரிவிக்கும் குறிப்பு ஒன்று குண்டு வெடித்த இடத்தில் இருக்கக் காணப்பட்டுள்ளது.


"எமது குரலை நாம் வார்த்தைகளின் மூலமாகவும், உண்மைச் செய்தி மூலமாகவும் வெளிப்படுத்த நாம் தீர்மானித்திருக்கிறோம், மேலாண்மை முறையை நாம் ஒழிப்போம், அராசகம் வாழ்க," என முறைசாரா அராஜகவாதிகளின் கூட்டமைப்பு (Informal Anarchist Federation, FAI) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


இத்தாக்குதல்களை தீவிரவாதிகளின் தாக்குதல் என்ற வகையில் தமது விசாரணைகளை இத்தாலியக் காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.


உக்ரேனியத் தூதரகத்திலும் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் எவ்வித வெடிபொருட்களும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]