இத்தாலியில் நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 20, 2012

இத்தாலியின் வடக்கே பொலோனா நகரில் இன்று இடம்பெற்ற 5.9 அளவு நிலநடுக்கத்தில் முவர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் வரையில் காயமடைந்தனர்.


தொழிற்சாலை ஒன்று இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வேறு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் அகப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அச்சத்தில் தமது வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர்.


ஆரம்பத்தில் 5.9 ஆகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கம் இன்று அதிகாலை 4:04 மணிக்கு பலோனா நகரில் இருந்து 35 கிமீ தூரத்தில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரண்டாவது தடவை 5.1 அளவில் நிலநடுக்கம் தாக்கியிருந்தது.


வரலாற்றுச் சிறப்பு மிக்க சில கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2009 ஆம் ஆண்டில் 6.3 அளவு நிலநடுக்கம் இத்தாலியின் மத்திய பகுதியத் தாக்கியதில் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.


மூலம்[தொகு]