இலண்டன் எக்குவடோர் தூதரகத்தில் இரகசிய ஒட்டுக் கேட்புக் கருவி கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 5, 2013

இலண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் இரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எக்குவடோர் அறிவித்துள்ளது.


அமெரிக்கா மற்ற நாடுகளின் தூதரகங்களை தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக சினோடன் வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம், மற்ற நாடுகளை உளவு பார்ப்பதற்கு யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும் இக்குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது.


இதுதொடர்பாக எக்குவடோர் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலில் செய்தியாளர்கள் மத்தியில் ஒட்டுக் கேட்பு கருவியைக் காண்பித்தார். பின்னர் அவர் பேசுகையில், இதே தூதரகத்திலேயே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கடந்த ஓராண்டு காலமாக தஞ்சம் புகுந்து இருக்கிறார். அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவதே இல்லை. அப்படி வெளியே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அதே தூதரகத்தில் தான் இத்தகைய ஒட்டு கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.


மூலம்[தொகு]