எக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 17, 2016


தென் அமெரிக்க நாடான எக்வடோரில் 7.8 ரிக்டர் அளவுக்கு ஆற்றலுள்ள நிலநடுக்கத்தில் குறைந்தது 235 பேர் உயிரிழந்தனர். நாட்டின் வடமேற்கு கரையோரம் உள்ள முசீன் நகருக்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் 19.2 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்டின் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து கூடுதல் தகவல்கள் வரும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.


இதனிடையே இத்தாலிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அதிபர் ரஃபேயில் கொரேயா, தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்புகிறார். நிலநடுக்கம் மையம்கொண்டிந்ருந்த பகுதிக்கு அருகிலுள்ள நகரான பெதர்னாலேவின் மேயர் தமது நகரம் முற்றாக அழிந்து போயுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


1979இக்கு பிறகு எக்குவடோரில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 1979இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்தார்கள். குறிப்பாக பெதர்னாலேவுக்கு அருகில் 163 பின்னதிர்வுகள் உணரப்பட்டன என்று நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சிறிய அளவிளான நிலநடுக்கம் 3 மாதங்களாக உணரப்படுவதாகவும் இதுவும் அது போல் தான் என்று நினைத்ததாகவும் 20 வினாடிகளுக்கு பின் இது மிகவும் பெரியதாக மாறியதாகவும் கிரிசுடியன் இபாரரா என்பவர் கூறினார்.


சில நாட்களுக்கு முன்பு நிப்பானில் ஏற்றபட்ட நிலநடுக்கத்தை விட எக்குவடோரில் ஏற்பட்டது 6 மடங்கு கடுமையானது என தேவிது என்ற புவியியல் துறை பேராசிரியர் கூறுகிறார். இந்த நிலநடுக்கம் கொலம்பியா நாட்டிலும் உணரப்பட்டது. எக்குவரோர் நாசுக்கா நிலத்தட்டும் தென்னமெரிக்க நிலத்தட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]