எகிப்தில் தொடருந்து-பேருந்து மோதலில் 50 குழந்தைகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 18, 2012

எகிப்தின் மத்திய பகுதியில் பள்ளிப் பேருந்து ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதியதில் நான்கு முதல் ஆறு வயதுடைய பள்ளி மாணவர்கள் 50 பேரும் பேருந்து ஓட்டுனரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


தலைநகர் கெய்ரோவில் இருந்து 350 கிமீ தூரத்தில் மன்பாலுட் நகரிலேயே நேற்று சனிக்கிழமை இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று எகிப்தின் போக்குவரத்துறை அமைச்சர் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்துள்ளார். ரெயில்வே ஆணையாளரும் தனது பதவியைத் துறந்துள்ளார்.


திறந்திருந்த தொடருந்துக் கடவை ஒன்றை குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து கடந்ததில் இவ்விபத்து ஏற்பட்டது. தொடருந்துக் கடவையை இயக்கும் நபர் தூக்கத்தில் இருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. விபத்தில் சிக்கிய பேருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் தொடருந்துடன் இழுபட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எகிப்தில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 8,000 பேர் வரையில் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர்.


மூலம்[தொகு]