கினியில் நடந்த படுகொலைகளுக்கு இராணுவ ஆட்சியாளர் பொறுப்பு - ஐநா

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 23, 2009

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் கடந்த செப்டம்பர் 28 இல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சிக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்த அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் மூசா டாடிஸ் கம்ரா கொலைகளைப் பொறுப்பேற்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.


எதிர்க்கட்சிக்காரர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை இராணுவ ஆட்சியாளர்கள் அடக்கியதில், 150 பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் வீதிகளில் வைத்து இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.


கினி இராணுவ அரசாங்கத்தின் இம் மோசமான அடக்கு முறையை ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலின் 15 நாடுகளும் கூடி ஆராய்ந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.


687 பேரை நேர்காணல் கண்டு பெறப்பட்ட தகவலை வைத்து ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை கினியின் வன்முறைகளை ஆராய்ந்தது. இதன்பின்னர் 60 பக்கங்களையுடைய அதன் அறிக்கை வெளியிடப்பட்டது.


பொது மக்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் பாலியல் வல்லுறவுகளுக்கு அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் கம்ராவும் அவரது அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டுமென ஐ. நா. வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்முறையில் மக்கள் கொலை செய்யப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதால் சர்வதேச நீதிமன்றம் கினி ஆட்சியாளர் கம்ராவை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் டிசம்பர் 3ம் நாள் கம்ரா மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுக் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.


எனவே கம்ரா மீதான விசாரணைகளுக்கு அவரின் நெருங்கிய சகாக்கள் பதிலளிக்க வேண்டிவருமெனக் கருதப்படுகிறது. மொரோகோவில் கம்ரா சிகிச்சை பெற்றுவருவதால் ஐ. நாவின் அறிக்கை குறித்து எதையும் கூற முடியாதுள்ளதென மொரோகோ வெளிநாட்டமைச்சர் சொன்னார்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]