குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 2, 2013

கடந்த நவம்பரில் பிறந்த குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலி நாட்டைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக பெரு நாட்டுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


35 வயதுடைய ரமோன் காஸ்டில்லோ குவேரா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். இவரது உடல் பெருவின் குஸ்க்கோ நகரில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


கிறித்தவத்துக்கு எதிரானது எனக் கூறி இக்குழந்தை இந்த மதவாதக் குழுவினரால் உயிருடன் எரியும் தீயில் வீசப்பட்டுக் கொல்லப்பட்டது. குழந்தையின் தாய் நத்தாலியா குவேராவும், மேலும் மூன்று சந்தேக நபர்களும் சிலியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.


ரமோன் காஸ்டில்லோ குவேரா இக்குழந்தையின் தந்தை என நம்பப்படுகிறது. தான் ஒரு கடவுள் என்றும், 2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியும் எனவும் இவர் கூறி வந்திருந்தார்.


கடந்த நவம்பரில் பிறந்து மூன்று நாட்களே ஆன இக்குழந்தை கொல்லப்பட்டது ரோமன் கத்தோலிக்க மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிலி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.


மூலம்[தொகு]