கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 21, 2010


இந்தியாவில் கூர்க்காலாந்து தலைவர் மதன் தாமங் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.


மதன் தாமங் அகில இந்திய கூர்க்கா லீக் அமைப்பின் தலைவர் ஆவார். இக்கட்சி கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரிப் போராடி வந்த மிகப் பழமையான கட்சியாகும்.


இக்கொலைக்கு மற்றொரு போராளிக் குழுவான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (GJM) கட்சி மீது கூர்க்கா லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை ஜன்முக்தி மோர்ச்சா மறுத்திருக்கிறது.


நேப்பாள மொழியைப் பேசும் கூர்க்காக்கள் இந்தியாவின் தேயிலை பயிரிடும் மாவட்டமான டார்ஜீலிங் மலைப்பிரதேசத்தில் தனிநாடு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.


”இன்று டார்ஜிலிங் நகரில் மதன் தாமங் அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்..


இச்சம்பவத்தையடுத்து டார்ஜிலிங் மாவட்டம் முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டன. தாமங் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலம்[தொகு]