பழங்குடியினரின் மறைந்த மொழிகளைத் தேடும் பணி ஆத்திரேலியாவில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 15, 2011

ஆத்திரேலியப் பழங்குடியினரின் காணாமல் போன மொழிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் மூன்றாண்டுத் திட்டம் ஒன்றில் அந்நாட்டு நூலகவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கப்டன் ஜேம்ஸ் குக் உடனான பழங்குடியினரின் முதலாவது தொடர்பு

பழங்குடியினத்தவரின் மறைந்த மொழிகள் பலவற்றுக்கான சான்றுகள் சில ஆரம்பகால குடியேறிகள் விட்டுச் சென்றுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகம் தெரிவித்துள்ளது. 1788 ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு ஏறத்தாழ ஒரு மில்லியன் பழங்குடியினர் வாழ்ந்ததாகவும், 250 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இப்போது சில டசின் மொழிகளே எஞ்சியுள்ளன. 22 மில்லியன் மக்கள் வாழும் ஆத்திரேலியாவில் தற்போது ஏறத்தாழ 470,000 பழங்குடியினரே வாழ்கின்றனர்.


"எமது நாட்டின் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளே எமது கலாசாரத்தின் முதுகெலும்பு," என ஆத்திரேலிய கலைத்துறை அமைச்சர் ஜோர்ஜ் சூரிஸ் தெரிவித்தார். ரியோ-டிண்டோ என்ற ஆங்கில-ஆத்திரேலிய்ச் சுரங்க நிறுவனம் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கிறது.


2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, 145 பழங்குடி மொழிகளே தற்போது எஞ்சியுள்ளன. இவற்றில் 110 மொழிகள் அழியும் தறுவாயில் உள்ளன.


மூலம்[தொகு]