முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய கடைசி வீரர் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 5, 2011

முதலாம் உலகப் போரில் பங்கு பற்றி உயிருடன் இருப்பதாகக் கருதப்படும் கடைசி வீரரும் இன்று ஆத்திரேலியாவில் தனது 110வது அகவையில் காலமானார்.


பிரித்தானியாவில் பிறந்த கிளவுட் சவுல்ஸ் என்பவர் 15வது அகவையில் பிரித்தானிய ரோயல் கடற்படையில் இணைந்து எச்.எம்.எஸ். ரிவெஞ்ச் என்ற போர்க்கப்பலில் பணிக்குச் சென்றார். 1920களில் இவர் ஆத்திரேலியாவில் குடியேறினார். அங்கு இராணுவத்தில் 1956 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஆத்திரேலிய கடற்படையில் இணைந்து பணியாற்றினார்.


மேற்கு ஆத்திரேலிய மாநிலத் தலைநகர் பேர்த் நகரில் உள்ள மருத்துவ இல்லம் ஒன்றில் காலமானார். 76 ஆண்டுகளாக இவரது துணைவியாக இருந்த எத்தெல் மூன்றாண்டுகளுக்கு முன்னரே காலமானார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் 11 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.


முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய வீரர்கள் பில் ஸ்டோன், ஹென்றி அலிங்கம், ஹாரி பாட்ச் ஆகிய அனைவரும் 2009 இல் இறந்து விட்டனர். அமெரிக்கப் போர் வீரர் பிராங்க் பக்கில்ஸ் இவ்வாண்டு ஆரம்பத்தில் காலமானார். பெண்களுக்கான ரோயல் வான் படையில் பரிசாரகியாகப் பணியாற்றிய பிரித்தானியப் பெண் புளோரென்ஸ் கிறீன் கடந்த பெப்ரவரியில் தனது 110வது அகவையைத் தாண்டியுள்ளார். இவர் போரில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.


மூலம்[தொகு]