யாழ் பொது நூலகத்தில் தென்னிலங்கை உல்லாசப்பயணிகள் கலவரம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 25, 2010

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் நேற்று முன்தினம் உள்நுழைந்த தென்னிலங்கையைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் அங்கிருந்த நூல்களை எடுத்து வீசி அட்டகாசம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.


மீளப் புனரமைக்கப்பட்ட யாழ் பொது நூலகம்

கடந்த சனிக்கிழமை சமாதான நோக்கத்துக்காகவே உல்லாசப் பயணிகள் பொது நூலகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் என்றும் இதை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வார்களாயின் இதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாநகரசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தெற்கு உல்லாசப் பயணிகள் சுமார் 300 பேர் வரை நூலக வாயிலில் குவிந்ததாகவும், உள்ளே நுழைய விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து யாழ் மாநகரசபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து சமரசப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் குறித்த பயணிகள் சிலர் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டதை அடுத்து அவர்களால் கதவு திறக்கப்பட்டு உல்லாசப் பயணிகளை உள்ளே நுழைந்தனர்.


உள்ளே சென்ற உல்லாசப் பயணிகள் அங்கிருந்த சில புத்தகங்களை எடுத்துக் கீழே எறிந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இதனாலேயே நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.


யாழ் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தென்னிலங்கை வன்முறைக் குழுவொன்றால் தீக்கிரையாக்கப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இது பின்னர் மீள நிர்மாணிக்கப்பட்டது.

மூலம்[தொகு]