யேமனில் பாதுகாப்பு அமைச்சு மீது தாக்குதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 5, 2013

யேமன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 37 பேர் படுகாயமடைந்தனர்.


பாப் அல்-யமான் நகரில் உள்ள அமைச்சக் கட்டடத்தின் நுழைவாயிலில் முதலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆயுதம் தாங்கிய போராளிகள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அறிவிக்கப்படுகிறது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பலர் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இன்றைய தாக்குதலுக்கு இதுவரையில் யாரும் உரிமை கோரவில்லை. அராபியத் தீபகற்ப அல்-கைதா இயக்கத்தினரே இத்தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது. ஆனாலும், முன்னாள் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலேயின் ஆதரவாளர்களே இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.


கடந்த சில வாரங்களாக மோட்டார் சைக்கிள்களில் வரும் போராளிகள் அதிகாரிகள் மீது தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.


2011 ஆம் ஆண்டில் அலி அப்துல்லா சாலே பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது.


மூலம்[தொகு]