லாத்வியாவின் புதிய அரசுத்தலைவராக ஆண்டிரிசு பர்சின்சு தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 3, 2011

பால்ட்டிக் நாடுகளில் ஒன்றான லாத்வியாவின் புதிய அரசுத்தலைவராக ஆண்டிரிசு பர்சின்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஆண்டிரிசு பர்சின்ஸ்

லாத்வியாவில் நாடாளுமன்றமே அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. ஆண்டிரிசு 100 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 53 பேரின் ஆதரவைப் பெற்று லாத்வியாவின் அரசுத் தலைவராக இருந்த வால்டிசு சாட்லர்சை வென்று புதிய அரசுத்தலைவாரானார்.


66 வயதுள்ள பர்சின்ஸ் முன்னாளில் வங்கியாளராகப் பணியாற்றி பசுமை மற்றும் விவசாயிகளின் தொழிற்சங்கத்தில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார்.


56 வயதுள்ள முன்னாள் அரசுத்தலைவர் வால்டிஸ் சாட்லர்ஸ் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தார். சூலை 2007 இல் அரசுத்தலவரான இவர் ஒரு மருத்துவர் ஆவார்.


நாட்டின் புகழ்பெற்ற உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரது வீட்டை சோதிப்பதற்கு லாத்வியாவின் ஊழலுக்கு எதிரான அரசு நிறுவனம் அவரது வீட்டை சோதிப்பதற்கு நாடாளுமன்றம் தடை விதித்திருந்ததை அடுத்து சாட்லர்ஸ் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தார். இதனாலேயே வாக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


லாத்வியா அனைத்துலக நாணய நிதியம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து பெருந்தொகையான நிதியைக் கடனாகப் பெற்றுள்ளமை அதனை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.


1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லாத்வியா பிரிந்ததில் இருந்து ஆண்டிரிஸ் பெர்சின்ஸ் அரசியலில் ஒரு புள்ளியாக இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு வரை அவர் வங்கி ஒன்றை நிர்வகித்து வந்தார். பின்னர் நாட்டின் வர்த்தக சங்கத் தலைவராகப் பணியாற்றினார். கடந்த ஆண்டு அக்டோபரிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மூலம்[தொகு]