லாத்வியாவில் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 22, 2013

லாத்வியத் தலைநகர் ரீகாவில் பல்பொருள் அங்காடி ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலையில் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


நேற்றிரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மேலும் ஒரு கூரை இடிந்து வீழ்ந்தது. மீட்புப் பணியாளர்கள் மூவர் இதில் கொல்லப்பட்டனர். இவ்விபத்துக் குறித்து காவல்துறையினர் புலனாய்வு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளிடையே இருந்து 40 பேர் வரை இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.


விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை ஆயினும், மேல் மாடியில் பூங்கா ஒன்றை அமைக்கும் பணி இடம்பெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாக்சிமா என்ற இந்த பல்பொருள் அங்காடி 2011 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்ட போது இதற்கு சிறந்த கட்டிடக்கலைக்கான தேசிய விருது இதற்கு வழங்கப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவிக்கிறது.


மூலம்[தொகு]