2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. கனடா

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 21, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவின் மூன்றாவது போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச பன்னாட்டு அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார முதலில் தமது அணியை துடுப்பாடத் தெரிவு செய்தார். இலங்கை அணியில் முன்னணி வீரர் லசித் மாலிங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.


ஆரம்ப ஆட்டக்காரர் டில்ஷான் 59 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். குமார் சங்கக்கார 87 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்றார். மகேல ஜயவர்தன 81 பந்துகளுக்கு 100 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக வேகமாக சதம் பெற்ற இலங்கை வீரராகவும் மூன்றாவது பன்னாட்டு வீரராகவும் அவர் வரலாறு படைந்த்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை குவித்தது.


பதிலுக்கு ஆடிய கனடா அணி 37 ஓவர்களில் 122 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. றிஸ்வான் சீமா 35 பந்துகளுக்கு 37 ஓட்டங்களைப் பெற்றார். நுவன் குலசேகர, திசாரா பெரேரா தலா 3 இலக்குகளையும் முரளிதரன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.


மகெல ஜயவர்தன போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது இது 6வது தடவையாகும்.


மூலம்[தொகு]