2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: காலிறுதியில் ஆத்திரேலியா வெளியேறியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 25, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆத்திரேலிய அணியை 5 இலக்குகளால் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இந்த வெற்றியை அடுத்து அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாக்கித்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


அகமதாபாத்தில் சர்தார் பட்டேல் அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆத்திரேலிய அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகள் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் 104 ஓட்டங்களைப் பெற்றார். இது ஒருநாள் போட்டிகளில் மெண்டிங் பெற்ற 30வது சதமாகும்.


261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணியில் வீரேந்தர் சேவாக் 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 53 ஓட்டங்களையும் காம்பீர் 50 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில், யுவ்ராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி 5 இலக்குகள் இழப்புக்கு 261 ஓட்டங்களைப் பெற்றது.


ஆட்ட நாயகனாக யுவ்ராஜ் சிங் தெரிவானார். தென்னாப்பிரிக்காவின் மராயஸ் எராஸ்மஸ், இங்கிலாந்தின் இயன் கூல்ட் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.


1987 இல் உலகக்கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற ஆத்திரேலிய அணி அதன்பின் 1999, 2003, 2007 ஆம் ஆண்டுகளில் உலககிண்ணத்தை வென்றிருந்தது. அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் உலகக் கிண்ணப் போட்டியில் 5வது சதத்தைப் எடுத்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 30வது சதமும் ஆகும்.


மூலம்[தொகு]