கொங்கோ எம்23 போராளிகள் கோமா நகரை விட்டு வெளியேற ஒப்புதல்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 29, 2012

கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் எம்23 போராளிகள் தாம் அண்மையில் கைப்பற்றியிருந்த கோமா நகரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அக்குழுவின் இராணுவத் தலைவர் சுல்தான் மக்கெங்கா அறிவித்துள்ளார். ஆனாலும் தமது 100 போராளிகள் கோமா விமானநிலையப்பகுதியில் தங்கியிருப்பர் என அவர் தெரிவித்தார்.


முறையான கையளிப்பு வைபவம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.


கடந்த வார இறுதியில் உகாண்டாவில் அவசர அவசரமாகக் கூடிய ஆப்பிரிக்கப் பிராந்தியத் தலைவர்கள், போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் அனைவரும் கோமா நகரை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தனர்.


கடந்த ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தில் இருந்து எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினர் வெளியேறி இராணுவத்தினருக்கு எதிராகப் போர் தொடுத்ததை அடுத்து, நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து 500,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர்.


எம்23 போராளிகளைத் தாம் ஆதரிப்பதாக வந்த செய்திகளை உகாண்டாவும், ருவாண்டாவும் மறுத்து வருகின்றன. எம்23 குழுவினரின் அரசியல் பிரிவினர் கோமா நகரில் தொடர்ந்து தங்கியிருப்பர் என்றும் வதந்திகள் உலாவுகின்றன.


மூலம்[தொகு]