சிலியின் முன்னாள் அரசுத்தலைவர் அய்யந்தே தற்கொலை செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 20, 2011

1973 ஆம் ஆண்டில் சிலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் சல்வடோர் அலண்டே தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதை பன்னாட்டு நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.


சல்வடோர் அலண்டே

இவ்வாய்வுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அலண்டேயின் உடல் அவரது புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டது. அலண்டே தற்கொலை செய்து கொண்டார் என்பதில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொள்லவில்லை, ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் அவர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ச் சந்தேகம் தெரிவித்து அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.


1973 ஆம் ஆண்டில் ஆகுஸ்தோ பினொச்சே இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இதன் போது அப்போதைய அரசுத்தலைவர் சல்வடோர் அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது நண்பரும் கியூபாவின் அப்போதைய தலைவருமான பிடெல் காஸ்ட்ரோ அவருக்களித்த தானியங்கித் துப்பாக்கி மூலம் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாக இராணுவத்தினர் கூறினர்.


அலண்டேயின் உடலைச் சோதித்த பன்னாட்டு நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை சிலியின் அரசாங்கத்துக்குக் கையளித்துள்ளனர். இதன்படி அவரது கால்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மூலம் பாய்ந்த இரண்டு குண்டுகள் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்லது.


"மூன்றாம் மனிதர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை," என நிபுணர் குழுவின் தலைவர் டேவிட் பிரேயர் தெரிவித்தார்.


அலண்டே 1970 இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் என்ற பெயரைப் பெற்றார். சோவியத் ஆதரவு பெற்ற மார்க்சியவாதியான அலண்டே தொழிற்சாலைகள், மற்றும் பண்ணைகளைத் தேசிய மயமாக்கினார். இவரது பொருளாதார சீர்திருத்தங்கள் அமெரிக்காவைக் கோபத்துக்குள்ளாக்கியது. அவருக்கெதிரான இராணுவப் புரட்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது. ஜெனரல் பினோச்சேயின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் விசாரணைகளை எதிர்கொண்ட வேளையில் தனது 91வது அகவையில் 2006 ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]