இந்தியத் தலைநகர் தில்லியை 4.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 5, 2012

இந்தியத் தலைநகர் தில்லியை இன்று 4.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. இதனை அடுத்து அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று உள்ளூர் நேரம் 13:10 மணிக்கு இந்நிலநடுக்கம் தாக்கியது. தில்லியில் இருந்து 50 கிமீ மேற்கே, அரியானா மாநிலத்தில் பகதுர்கா என்ற நகரில் 4.9 அளவு நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க மையம் அறிவித்தது. 19 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.2 ஆக இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.


தில்லியிலோ அல்லது பகதுர்காவிலோ பொருட்சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பல முறிவுப் பாதைகளுக்குக் கிட்டவாக தில்லி நகரம் அமைந்திருக்கிறது. அண்மையில் இங்கு நிலநடுக்கத்தை எதிர்நோக்க மக்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டர்ம்பர் மாதத்தில் இருந்து தில்லியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது மூன்றாவது தடவை ஆகும்.


மூலம்[தொகு]