தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 1, 2011

தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், திமுகவினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு, போலீசார் கைது செய்து வருகின்றனர். இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்,ஏ.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதனையடுத்து சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதில் கலந்து கொண்ட திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எமஎல்ஏ உதய சூரியன், அங்கையர்கண்ணி, செஞ்சி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி, நகர செயலாளர் பாலாஜி உள்பட மொத்தம் 2000 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் திமுக எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கழக வெளியீட்டுச் செயலாளர் செல்வேந்திரன், தங்கராசு, திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட திமுகவிரை அழைத்துச் செல்ல வாகனங்கள் இல்லாததால் அரசுப் பேருந்துக்கள் மூலம் கைது செய்யப்பட்டவர்களை அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.


மூலம்[தொகு]