ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' வெளியிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 23, 2010


2004 தொடக்கம் 2009 வரை அமெரிக்க இராணுவத்தினரின் ஈராக் போர்க் குற்ற நடவடிக்கைகளை விளக்கும் கிட்டத்தட்ட 400,000 இரகசிய ஆவணங்களை நேற்று வெள்ளிக்கிழமை அன்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனர், ஜூலியன் அசான்ச்

அமெரிக்க இராணுவ வரலாற்றில் இதுவரையில் இவ்வளவு தொகையான ஆவணங்கள் கசியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாவணங்களின் படி, 2004-2009 காலப்பகுதியில் 109,000 இறப்புகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவர்களில் 66,000 பேர் பொது மக்கள் என்றும் கூறப்படுகிறது


ஈராக்கில் போர் நடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சிறைச்சாலைகளில் போர்க் கைதிகள் சித்திரவதி செய்யப்படுதல், போன்ற பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அமெரிக்க இராணுவக் காவல் அரண்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் இறப்பு தொடர்பான ஆவணங்களை அமெரிக்க இராணுவம் வெளியிடாமல் இரகசியமாகப் பேணி வந்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.


”சட்டவிரோதமாகப் படுகொலை செய்யப்பட்ட 40 பொதுமக்கள் தொடர்பான ஆவணங்கள் வழக்குப் பதிவதற்கு ஏதுவானது” என விக்கிலீக்சின் ஆசிரியரும், நிறுவனருமான ஜூலியன் அசான்ச் அல்ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


மூலம்