தமிழகத்தில் மடிக்கணினிகள் மற்றும் இலவசங்களை வழங்கும் திட்டத்தை செயலலிதா ஆரம்பித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 16, 2011

அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கலப்பி, கலந்தரைப்பி, ஆடு, மாடு, மடிக்கணினி போன்றவை வழங்கும் திட்டத்தை காக்களூரில் இன்று தொடங்கி வைத்தார்.


ரூ.912 கோடி செலவில் 9.12 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி செலவில் கலப்பி, கலந்தரைப்பி, மின்விசிறி, ரூ.56 கோடி செலவில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு கலப்பின செர்சி கறவை மாடுகள், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ரூ.135 கோடி செலவில் தலா 4 ஆடுகள், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஆடு, மாடுகள் வழங்குதல் போன்ற திட்டங்கள் எழைகளின் பொருளாதாரம் வலிமை அடைய வேண்டும் என்பதற்காகவே என்று அவர் கூறினார்.


முதலமைச்சர் சிறப்புத் திட்டம் வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் கடலூரிலும், 17ஆம் தேதி மேல்புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களிலும், 18ஆம் தேதி நெய்வேலியிலும் பொதுமக்களுக்கு வழங்க உள்ளது.


இன்று முதலமைச்சர் கடலூரில் சிறப்பு திட்டங்கள் வழங்கும் விழாவில், இது போன்ற சிறப்பு திட்டங்களை கொச்சை படுத்தக் கூடாது என்றும், இவைகள் மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது என்றும், இது போன்று இழிவு படுத்தலை பொருளாதாரம் அறிந்த எவரும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை விற்க கூடாது என்று அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.


இப்போது வழங்கப்பட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொடர்பான காப்புரிமை மென்பொருளைப் பயன்படுத்த மாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். ஆர்வலர்களின் கடுமையாக எதிர்ப்பின் விளைவாக இலவசமாகவே கணினியில் பயன்படுத்தக்கூடிய லினக்ஸ் மென்பொருளும் லாப்டாப்பில் இணைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.


மாடுகளை வழங்க திட்டமிட்டுள்ள அரசாங்கம், மாடுகளுக்குத் தேவையான தீவனம், மேய்ச்சல் நிலம், ஆடுகள் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் இவற்றையெல்லாம் அரசில் கணக்கிலெடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை என்றும் வேறு சிலர் குறை கூறுகின்றனர்.


மூலம்[தொகு]