ருவாண்டா இனப்படுகொலை: பெண்களுக்கான முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 24, 2011

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் போது துட்சி இனத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் வதை, மற்றும் இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றத்துக்காக முன்னாள் பெண் அமைச்சர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.


ருவாண்டா இனப்படுகொலை (1994)

65 வயதான போலீன் நியிரமசுகூக்கோ என்பவர் ஐநா ஆதரவுடன் இயங்கும் ருவாண்டாவுக்கான போர்க்குற்ற நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. 10 ஆண்டுகள் இடம்பெற்ற இவ்வழக்கில் அமைச்சருடன் அவரது மகன், மற்றும் நான்கு முன்னாள் அமைச்சு அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.


100 நாட்கள் இடம்பெற்ற இப்படுகொலை நிகழ்வில் மொத்தம் 800,000 துட்சி இனத்தவரும், ஊட்டு இன மிதவாதிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.


குடும்பநல, மற்றும் பெண்கள் மறுவாழ்வு அமைச்சராக இருந்த நியிரமசுகூக்கோ, தெற்கு ருவாண்டாவில் பூட்டாரே என்ற தனது தொகுதியில் இனப்படுகொலைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது 20 வயதாக இருந்த தனது மகனுடன் சேர்ந்து தூத்சி இனப் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தூத்சி இனத்தவர்களை மிக விரைவாக அழிப்பதே அவர்களது நோக்கமாக இருந்ததாக போர்க்குற்ற நீதிமன்றம் தெரிவித்தது.


நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட போது போலீன் நியிரமசுகூக்கோ எவ்வித சலனமும் இன்றி அமர்ந்திருந்ததாக பிபிசி செய்தியாலர் தெரிவித்தார். தன் மீதான குற்றங்கள் அனைத்தையும் அவர் நிராகரித்திருந்தார்.


இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டோரை விசாரணை செய்தவதற்காக ஐநா நியமித்த இந்தப் போர்க்குற்ற நீதிமன்றம் அயல்நாடான தான்சானியாவில் கூடியிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]