வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 13, 2010

இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வதில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது. முதலிடத்தில் தில்லி உள்ளது.


இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நாடாளுமன்றம் , பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை தில்லி பிடித்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 23.4 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.


அதேபோல் பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமை கொண்ட மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் வருகின்றனர். மூன்றாவது இடம் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.


சென்னையில் சிறப்பாக உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளால் அளிக்கப்படும் சிகிச்சையினால் ஈர்க்கப்பட்டு இங்கு வரும் மருத்துவ சுற்றுலாப் பயணிகள் (Medical Tourism) மற்றும் அழகிய மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோயில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை , கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற சிறப்புமிக்க நகரங்கள் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு 20 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

மூலம்[தொகு]