இந்தியாவில் 1 மில். பேரின் பட்டினிச் சாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணம் எனக் குற்றச்சாட்டு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டம்பர் 11, 2010

பிரித்தானிய இந்தியாவின் வங்காளப் பகுதியில் 1943 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும் பஞ்சத்தின் போது மில்லியன் மக்களின் அவசர உணவுத் தேவைக்கான வேண்டுகோளை அன்றைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கவனத்தில் எடுக்கவில்லை என பஞ்சம் குறித்து அண்மையில் வெளியான புத்தகம் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் நெல் அனைத்தும் அப்போது சணல் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், பர்மாவை சப்பானியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து அரிசி இறக்குமதியும் நின்றுவிட்டதாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில்

1943 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பஞ்சத்தின் போது ஒன்று முதல் மூன்று மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர்.


போர்க்காலத்தின் போது அவசர உதவிகளை அனுப்புவதற்கு கப்பல்கள் கிடைக்கவில்லை என அப்போது சர்ச்சில் தெரிவித்திருந்தார். ஆனால் மதுசிறீ முக்கர்ஜி என்ற இந்நூலின் ஆசிரியர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.


”சர்ச்சிலின் இரகசியப் போர்” என்ற அவரது புதிய நூலில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்ற அவசர உணவுக் கப்பல்கள் இந்தியாவுக்குள் நுழையாமல் மத்தியதரைக் கடல் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியில் ஏற்கனவே பெருமளவு உணவு தேவைக்கதிகமாகக் குவிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.


"வங்காளத்துக்கு நிவாரணம் அனுப்புமாறு பலமுறை விடுத்த வேண்டுகோள்களை சேர்ச்சிலும் அவரது உதவியாளர்களும் செவி மடுக்கவில்லை," என அவர் தெரிவித்தார்.


"ஐக்கிய அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் நிவாரணப் பொருட்களை வழங்க முன்வந்ததாகவும் ஆனால் அதற்கான கப்பல்களை வழங்க சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவை மறுத்து விட்டதாக முக்கர்ஜி தெரிவித்தார்.


சேர்ச்சிலின் 'இனவாதப்' போக்கே இதற்குக் காரணமென முக்கர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மூலம்[தொகு]