கிறிஸ்துமஸ் தீவில் இலங்கை - ஆப்கான் அகதிகள் மோதல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 23, 2009


ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 150 இலங்கை அகதிகளுக்கும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.


இதன் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் காயமடைந்த மூவர் உடனடியாக 2,600 கிமீ தூரத்தேயுள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


கிறிஸ்துமஸ் தீவு

இலங்கையர்களும் ஆப்கானிஸ்தானியர்களும் மரக்கிளைகள் மற்றும் தும்புதடிகளாலும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கிறிஸ்மஸ் தீவில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோதல்களின் பின்னர் 37 பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், இதில் 10 பேர் தீவில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த கலகம் நேற்று இரவு, பச்சை முகாம் பிரிவில் ஆரம்பித்தது. எனினும் அந்த மோதல் 30 நிமிட நேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலகத்தின் போது அங்கு பணியாற்றுவோரும் காயமடைந்துள்ளனர்


இலங்கையர்களுக்கும் ஆப்கானிஸ்தானியர்களுக்கும், இடையில் கிறிஸ்மஸ் தீவில் கலகம் இடம்பெற்றமை இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறான கலகங்கள் ஏற்பட்டுள்ளன.


கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆப்கானிஸ்தானியர்களுக்கே அதிகளவில் இந்த வருடம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது


இதன்படி,12,544 ஆப்கானிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 21 இலங்கையர்களுக்கும் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.


கிறிஸ்மஸ் தீவில் 1088 பேருக்கான வசதிகளை கொண்ட முகாமே உள்ளது இதில் 969 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]