ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் தமது படையினரை மீள அழைக்க நியூசிலாந்து முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 3, 2012

2013 ஆம் ஆண்டுக்குள் தனது இராணுவத்தினரை ஆப்கானித்தானில் இருந்து மீள அழைக்கவிருப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.


நியூசிலாந்து 2003 ஆண்டில் இருந்து தனது படைகளை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வருகிறது. தற்போது ஆப்கானித்தானின் பாமியன் மாகாணத்தில் நியூசிலாந்தில் 140 படையினர் நிலை கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஐந்து நியூசிலாந்துப் படையினர் இரு வெவ்வேறு நிகழ்வுகளில் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


"கடந்த பத்தாண்டுகளில் நியூசிலாந்துப் படையினர் தீவிரவாதத்துக்கு எதிரான பன்னாட்டுப் படையினரின் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளனர், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது, பாமியான் மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் ஆளுமையில் பெரும் பங்கை வகித்தது," என நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜொனத்தன் கோல்மன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


ஆப்கானித்தானுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்குப் பயிற்சி, நிதியுதவி, மற்றும் அபிவிருத்திக்கான உதவி போன்றவை இவற்றுள் அடங்கும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.


செப்டம்பர் 2014 ஆம் ஆண்டிலேயே தமது படையினரைத் திரும்ப அழைக்க நியூசிலாந்து முன்னதாகத் திட்டமிட்டிருந்தது.


மூலம்[தொகு]