நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 15, 2016

நியூசிலாந்து
2016, நவம்பர் 14 இல் நடந்த நியூசிலாந்து நிலநடுக்கத்தின் வரைபடம்

நியுசிலாந்தில் நள்ளிரவு நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக முதலில் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது.

நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை பேரலைகள் தாக்கும் என்று நியூசிலாந்தின் குடியியல் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது. மேலும், நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில், 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்ததாக அறியப்பட்டது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

எலிசபத் என்ற ஒரு பெண்மணி ரேடியோ நியூசிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, அதனால் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது என்றார். வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது.

பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாடு ஆத்திரேலியா மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]