மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 3, 2013

மலேசியாவின் கிழக்கே சபா மாநிலத்தில் செம்பூர்னா என்ற இடத்தில் ஆயுதக் கும்பல் ஒன்றுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.


சபா மாநிலத்தில் செம்பூர்னா

செம்பூர்னாவின் கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலில் ஆயுதக்கும்பல் ஒன்று நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து செம்பூர்னா காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் அங்கு சென்ற போது அவர்கள் திடீர்த்தாக்குதலுக்கு இலக்கானார்கள். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர்.


கடந்த மாதம் பிலிப்பீன்சைச் சேர்ந்த குறைந்தது 100 ஆயுததாரிகள் லகாத் டத்து மாவட்டத்திற்குப் படகுகள் மூலமாக வந்திறங்கியிருந்தனர். இவர்களுக்கும் நேற்றுத் தாக்குதல் நடத்திய ஆயுதக் கும்பலுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதா என்பது ஆராயப்பட்டு வருவதாகக் காவல் துறை தலைவர் இசுமைல் ஒமார் தெரிவித்தார்.


இப்பகுதி தமக்கே சொந்தம் என 19 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் காட்டுவதாக பிலிப்பீனோக்கள் கூறுகின்றனர். "சூலு அரசுப் படை" எனக் கூறிக் கொள்ளும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழு கடந்த பெப்ரவரி முதல் லகாத் டத்து மாவட்டக் கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசம் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளியன்று இப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் 12 பிலிப்பினோக்களும், இரண்டு மலேசியக் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்.


சூலு சுல்தானகம் என்பது ஒரு காலத்தில் (1457-1917) பிலிப்பீன்சின் பெரும்பாலான தெற்குத் தீவுகள், மற்றும் போர்னியோ ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இவர்கள் சபாவைத் தமது பகுதியாக அறிவித்திருந்தன. சபா பின்னர் 1800களில் பிரித்தானியாவின் காப்பு நாடாக அறிவிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சபா மலேசியாவுடன் இணைக்கப்பட்டது. சூலு சுல்தானகத்திற்கு மலேசியா இப்போதும் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை குத்தகையாகக் கொடுத்து வருகிறது.


சபாவின் உண்மையான உரிமையாளராகத் தம்மை அறிவிக்குமாறு சூலு அரசுப் படை கோரி வருகிறது. அத்துடன் பழைய குத்தகை உரிமையை மீள் பரிசீலனைக்கு விடுமாறும் அது கேட்டு வருகின்றது. இக்கோரிக்கையை ஏற்க மலேசியா மறுத்து வருகிறது.


சூலு சுல்தானகத்தின் சுல்தானாகத் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மூன்றாம் ஜமாலுல் கிராம் என்பவரின் இளைய சகோதரரான அக்பிமுதின் கிராமின் தலைமையில் சுமார் நூறு பேர் கொண்ட ஆயுதக் கும்பலொன்று தற்போது லகாத் டத்து மாவட்டத்தை ஊடுருவியுள்ளது.


இதற்கிடையில், லகாத் டத்து பகுதியில் ஊடுருவியுள்ள பிலிப்பீன்சு நாட்டவர்களுடன் இனிப் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களைச் சரண் அடையுமாறும் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் சரணடைய மறுத்தால் அவர்கள் கடும் நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆயுதக்குழு அப்பகுதியை விட்டு வெளியேறக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டதாகவும் இனி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நஜிப் கூறியுள்ளார்.


மூலம்[தொகு]