செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 28, 2013

செவ்வாய்க் கோளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் ஆளில்லா விண்ணுளவி கியூரியோசிட்டி சேகரித்த மண் மாதிரிகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விண்ணுளவில் உள்ள உபகரணங்கள் மண் மாதிரியின் ஒரு பகுதிகளை சூடாக்கிய போது பெருமளவு H2O ஆவியாக வெளியேறியுள்ளது. இது குறித்த தகவல்கள் சயன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


செவ்வாயின் செந்தூசியில் 2% நீர் இருப்பதாக கியூரியோசிட்டி ஆய்வாளர் லோரி லெசின் மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர். இது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ள மூல வளமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.


செவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும்.


கியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]