சிரியாவில் வேதி ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கு 2013 நோபல் அமைதிப் பரிசு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 11, 2013

சிரியாவில் வேதி ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையைக் கண்காணித்து வரும் வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்புக்கு இவ்வாண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பின் "வேதி ஆயுதங்களைக் களைவதில் காட்டும் தீவிரத்திற்காக" இப்பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு கூறியுள்ளது. நெதர்லாந்தில் தி ஏக் நகரில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.


சிரியாவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வேதி ஆயுதங்களை அழிப்பதற்காக இக்குழு தமது கண்காணிப்பாளர்களை சிரியாவுக்கு அனுப்பியிருந்தது. போர் முனை ஒன்றில் தமது பணியாளர்களை இவ்வமைப்பு அனுப்பியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.


இவ்வமைப்புக்கு நோபல் பரிசு மூலம் 8 மில்லியன் சுவீடிய குரோனர்கள் ($1.25மில்) கிடைக்கவிருக்கிறது. இவ்வாண்டு நோபல் பரிசுக்கு 259 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவர்களில் பாக்கித்தானிய பள்ளி மாணவி மலாலா யூசப்சையி, கொங்கோ மருத்துவர் டெனிசு முக்வேஜ் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன.


சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருந்தது.


மூலம்[தொகு]