காணாமல் போன மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலிலும் தேடுதல் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 14, 2014

ஒரு வாரத்தின் முன் மலேசிய-வியட்நாம் வான்பரப்பில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்சு 370 விமானத்தைத் தேடும் பணிகள் தற்போது இந்தியப் பெருங்கடலிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 239 பேருடன் சென்ற இவ்விமானம் ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்த பின்னரும் சில மணி நேரம் வானில் பறந்திருக்கலாம் எனத் தற்போது கருதப்படுகிறது.


பயணப் பாதை. ஆரம்பித்தது: கோலாலம்பூர், சென்றிருக்க வேண்டியது: பெய்ஜிங்.
A: அந்தமான் கடல், G: தாய்லாந்து வளைகுடா. M: மலாக்கா நீரிணை, S: தெற்கு சீனக் கடல்.
கோலாலம்பூர்
கடைசித் தொடர்பு
பெய்ஜிங்
1000 km
A
M
G
S

போயிங்777 விமானம் காணாமல் போய் அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு செயற்கைக் கோள்களுக்கு தரவுகளை அனுப்பியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவல் குறித்து மலேசியா எதுவும் தெரிவிக்கவில்லை.


கடந்த சனிக்கிழமை மார்ச் 8 அதிகாலை கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட எம்எச்370 விமானம் புறப்பட்டு இரு மணி நேரத்தில் மலேசியாவின் கிழக்கே தென்சீனக் கடலில் காணாமல் போனது. இதனை அடுத்து அப்பகுதியில் பல நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் மலேசியா ஈடுபட்டது.


அமெரிக்கா தற்போது தமது கடற்படைக் கப்பல் ஒன்றை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அத்துடன் இந்தியக் கடற்படை, வான்படை மற்றும் கரையோரக் காவல்படையும் தேடுதல் நடவடிக்கையில் இணைந்துள்ளன.


அந்தமான் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவ ராடார்கள் மறைந்த விமானத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.


மூலம்[தொகு]