ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் 300 பேர் பங்கேற்ற விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 14, 2015

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் 12.02.2015 அன்று காலை 10 மணியளவில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் நிகழ்ந்தது. இப்பயிலரங்கில் இக் கல்லூரியைச் சார்ந்த பல்துறை மாணவிகளும், ஆசிரியர்களும் 300 பேர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி க.கவிதா வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். வெ. சஞ்சீவராயன் தலைமையுரை வழங்கி தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணிகளின் தேவைகளையும், தமிழ்க்கணிமையின் வரலாற்று முதன்மையையும், திறவூற்று மென்பொருட்களின் பயன்பாடுகளையும் விளக்கினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகச் சார்ந்த, இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, பயிலரங்கச் சிறப்புரையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமத்தை வழங்கி, தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணிகளின் தேவே, தமிழ்க்கணினி குறித்த அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்து நேரிடை செயல்முறைப்பயிற்சியை அளித்தார்.

இக்கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் தமிழ அரசு வழங்கியுள்ள மடிக்கணியைப் பயன்படுத்தி வருவதால், அவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்களை தங்கள் கணினியில் நிறுவதிலும் பயன்படுத்துவதிலும் எழுந்த ஐயங்களைக் கேட்டறிய ஏதுவாக இருந்தது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி எசு.வினோதினி நன்றியுரை வழங்கினார்.